ஞாயிறு, 6 டிசம்பர், 2009
இட்லிக்குப் பின் ஒரு இதிகாசம்
புணேயிலிருந்து வெளிவரும் மராட்டிய நாளிதழான "சகாள்' தனது டிசம்பர் 6 ந்தேதி ஞாயிறு இதழில் பேராசிரியர் திரு ப்ரதீப் ஆப்தே அவர்கள் எழுதிய இட்லியின் இதிகாசம் பற்றிய கட்டுரை வெளியிட்டுள்ளது. இது ஒவ்வொரு (இட்லி சாப்பிடும்) தமிழரும் படிக்கவேண்டியதொன்று,
அவர் கட்டுரையின் தமிழ் சுருக்கம் கீழே காணலாம்.
சென்ற 20 வருடங்களில் இந்தியாவில் எல்லா நகரங்களிலும் குறிப்பாக மேற்கு மற்றும் தெற்கே இருக்கும் எல்லா ஊர்களிலும் இட்லியும் தோசையும் கிடைக்கின்றன. ஆனால் இவை ஏன் முன்பு தமிழ்நாட்டில் மட்டுமே செய்யப்பட்டு வந்தன என்ற கேள்விக்கு விடை எளிதில் கிடைப்பதில்லை.
வங்காளம், பீஹார் மற்றும் ஒரிசா ஆகிய மாநிலங்களில் அரிசி சாப்பிடும் வழக்கம் பல நூற்றாண்டுகளாக உள்ளது. மலைப்பிரதேசங்களில் உளுந்தும் பயிரிடப்படுகிறது. மாவு அரைக்க த்தேவையான எல்லா உபகரணங்களும் அவர்களிடம் சரித்திர காலத்திலிருந்தே உள்ளன. பின் ஏன் அவர்கள் இட்லி அல்லது தோசையை செய்யவில்லை?
பீமன் நளன் ஆகியோர் சமையல் கலையில் தேர்ச்சி பெற்றிருந்ததாக புராணங்கள் கூறுகின்றன. ஆனால், அவர்கள் விட்டுச்சென்ற "சமையல் கலை சம்ஹிதை" நமக்கு கிடைக்கவில்லை.
துர்கா பாகவதத்தில் "புராடோஷ்" என்ற பணியாரம் பேசப்படுகிறது. இது தான்யத்தின் மாவிலிருந்து செய்யப்பட்ட பணியாரம். இதில் பால் சேர்த்து "ஷீரா" (க்ஷீரம் என்ற சம்ஸ்க்ருத சொல் பாலைக்குறிக்கும்) என்று படைக்கப்பட்டது. இதன் பின்னர் வந்த நூல்களில் "இடரி" என்ற பணியாரம் சொல்லப்படுகிறது. ஆனால், இதற்கு சம்ஸ்க்ருத மூலம் இல்லை. தமிழில் இடி என்ற சொல் இருப்பதால் "இட்டிலி" என்று வந்திருக்கக்கூடும்.
கன்னடத்தில் "ஹிட்டு" (பிட்டு) என்ற பணியாரம் உள்ளது. இதுவும் "கடுபு" என்ற ஒரு பணியாரமும் இட்லி குடும்பத்தை
சேர்ந்ததாக எண்ணலாம்.
1475 ல் எழுதப்பட்ட "மனமோல்லாசம்" என்ற ஒரு சம்ஸ்க்ருத நூலில் ஒரு குறிப்பு நமக்கு சில தகவல்களைத் தருகிறது.
"அம்லி பூதம் மாஷா பிஷ்டம்
விடிகாசு வினிக்ஷேபம்......
வஸ்த்ர கர்பாமி அம்யாபி பிதாய பரிபாயேத்
அவதாயத்ரி மாரிசம் சூர்ணிதம் விகிரேத் அனு
துதாத்கா ஹிங்கு சர்பேப்யாம் ஜீரகேண ச தூ பயேத்
சுக்ஷிதா தவளா:க்ஷணா ஏதா இடாரிகா வச: " என்ற குறிப்பு தான் அது.
உளுந்து சேர்த்த அரிசி மாவு புளிக்க வைத்த பின் ஒரு குழியுள்ள பாத்திரத்தில் துணியில் வைத்து வேக வைக்கவும். கீழே இறக்கி நெய்யில் பெருங்காயம், மிளகு, ஜீரகம் ஆகியவை தாளித்துக்கொட்டி அதனுடன் வெள்ளை நிறத்தில் காணும் இந்த உணவுப்பொருளைப் பரிமாறவும். என்பது இதன் தமிழ் வடிவம்.
"சுபாசனா சரித்ரஜ" என்ற 1143 வருடத்திய சமையல் பற்றிய ஜைன நூலிலும் "இட்டாரிகா" என்ற பணியாரத்தைப் பற்றிய குறிப்பு வருகிறது.
14 வது நூற்றாண்டில் நாராயண வ்யாஸ் அவர்கள் செய்த ருத்வி பூர் வர்ணனை என்ற நூலில் முழு மதியைப்போன்ற "இட்டரி" என்ற குறிப்பு காணப்படுகின்றது.
அரண்மனையில் சமையல் ஐட்டங்களை வர்ணிக்கும் போது வெளியிலும் உள்ளும் தித்திக்கும் பூரிகள், மற்றும் "சுகுமார இட்டரியா" அதாவது மென்மையான இட்டரிகள் என்று கவி வர்ணிக்கிறார்.
இந்த எல்லா நூல்களிலும் உளுந்து முக்கியமாக குறிப்பிடப்படுகின்றது.
எது எப்படியிருப்பினும் நமக்கு இன்றியமையாத காலை உணவு இட்லி மற்ற மாநிலத்தவரையும் இந்த அளவு கவருவது நமக்கு பெருமையளிக்கிறது.
நன்றி : "சகாள்" புணே நாளிதழ்
செவ்வாய், 24 நவம்பர், 2009
தமிழ் யாத்ரிகர்கள் பற்றி புனே பேப்பரில் படித்தது
24 நவம்பர் 2009
மராட்டிய மண்ணின் மைந்தர் ராஜ் டாக்கரே அவர்கள் களமிறங்கி மராட்டியருக்காக போர்க்குரல் எழுப்புவது பற்றி செய்திகள் வந்த வண்ணம் இருக்கையில் புணே நகர நாளிதழ் "சகாள்" தனது நவம்பர் 23ந் தேதி செய்திகளில் (பக்கம் 5) தமிழ்நாட்டினர் பற்றி ஒரு செய்தி வெளியிட்டு நம்மை மகிழ்ச்சியில் திளைக்க வைத்துள்ளது.
செய்திக்குறிப்பின் தமிழாக்கம் இதோ;
தமிழ் "வார்கரி" யினரின் ஹரிநாம முழக்கம்
புணே அடுத்த ஆளந்தியில் ஞானேஸ்வர் சமாதியில் இன்று சுமார் 400 தமிழர் வார்கரி" என்று அழைக்கப்படும் மராட்டிய வழிபாட்டு ப்பாடல்களை ப்பாடி ஹரி நாமத்தின் ஒலி முழக்கம் செய்தனர்.
தமிழ்நாட்டில் இந்த "வார்கரி" என்ற வழிபாட்டு முறை நெடுங்காலமாக பஜனை, நாமசங்கீர்த்தனம் என்று கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வருடமும் நமது தமிழ் சகோதரர்கள் ஆளந்தி, பண்டர்பூர், தேஹுக்ராமம், சாஸ்வத், என்ற புண்ணிய ஸ்தலங்களுக்கு வந்து தரிசனம் செய்து செல்கின்றார்கள். தூயவெள்ளாடை, அங்கவஸ்த்ரம், நெற்றியில் சந்தனம், கழுத்தில் துளசி மாலை என்று காட்சியளிக்கும் இந்த பக்தர்கள் ஆளந்தியில் ஒரு தர்மச்சத்திரத்தில் இரு நாட்களாக தங்கி வருகிறார்கள். தமிழ்நாட்டில் தஞ்சாவூர், கும்பகோணம், சீர்காழி ஆகிய ஊர்களில் இருந்து இவர்கள் வந்திருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் "போதேந்த்ர ஸ்வாமி" அவர்கள் அதிசயங்கள் நிகழ்த்தி பின் ஜீவசமாதி ஆனபடியால் அவர்களுக்கு மிக அதிக அளவில் சீடர்கள் உள்ளார்கள்.அங்கு இன்றும் காலையில் பூஜை, நாமசங்கீர்த்தனம் என்று சிரத்தையுடன் நடத்தி வருகிறார்கள்.
இரு நாட்களாக தங்கி வரும் இந்த பக்தர் குழு இன்று கோவிலைச்சுற்றி வந்து "ஹரே ராம, ஹரே க்ருஷ்ணா' என்று பரவசத்துடன் "அபங்க்" வகைப்பாடல்களைப்பாடினர்.இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் இதில் பலர் ஹிந்தி கூடத் தெரியாதவர் ஆவர். மராட்டி சுத்தமாகத் தெரியாதாம். இருப்பினும் நமது ஸந்த் துக்காராம் அவர்களின் கீர்த்தனைகளை எவ்வளவு அழகாகப்பாடுகிறார்கள்! . இந்த பக்தர்களிடம் இருக்கும் பாண்டுரங்கன் மீதான பக்திக்கு மொழி எந்தவிதத்தடையாகவும் இல்லை என்று
சொல்லத்தோன்றுகிறது.
மௌளி (ஞானேஸ்வர்) தரிசனம் எப்படி இருந்தது என்று விஷ்ணு என்ற பக்தரிடம் கேட்டபோது "பகவானின் அருளை நான் விவரிக்க இயலாது இருப்பினும் ஞானேஸ்வர் அவர்களின் சமாதி தரிசித்தபோது என் உடல் சிலிர்த்து உள்ளே ஏன்னவோ மாற்றங்கள் ஏற்பட்டதென்னவோ உண்மை. இது குருவின் மூலம் நான் அடைந்த பாக்யம் ஏனெனில் அவர்தான் என்னை இங்கு அழைத்து வந்தார்" என்று கூறினார்.
தஞ்சாவூரில் " சைதன்ய மஹாப்ரபு கல்விக்கூடம்" என்ற பெயரில் ஒரு ஆஸ்ரமம் இயங்கி வருகிறது. இங்கு வழக்கமான கல்வி தரப்பட்டு வருகிறது. இங்கு வரும் பக்தர்களிடம்
இறைவனின் நாமஸ்மரணை செய்யுங்கள் என்ற வேண்டுகோள் மட்டும் அவர்களிடம் கேட்கப்பட்டு வருகிறது. சமூகத்தில் எந்த வேறுபாடும் பார்க்காமல் மற்றவர்களின் நலத்துக்காக உழையுங்கள் என்ற வேண்டுகோளும் விடுக்கப்பட்டு வருகிறது என்று ஒரு பக்தர் கூறினார். பக்தர்கள் கூற்றுப்படி ஆங்காங்கே நடைபெறும் சம்ப்ரதாய பஜனை கீர்த்தனைகள் மட்டுமின்றி வேத பாடசாலைகளும் நடத்தப்பட்டு வருகின்ற செய்தியையும் இவர்கள் நம்மோடு பகிர்ந்து கொண்டார்கள்.
தமிழர்களிடம் ஹரே ராம ஹரே க்ருஷ்ணா என்ற மூலமந்திரம் மட்டுமின்றி அனேக "வார்கரி" வழக்கங்கள் இழையோடுவது இவர்களிடம் பேசும்போது தெரிகிறது. இதில் ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும் சேர்ந்து பாடுகிறார்கள். ராதாக்ருஷ்ணரிடமும் பாண்டுரங்கரிடமும் ஆழ்ந்த பக்தியில் ஊறியவர்களாகக்காட்சியளிக்கிறார்கள். இந்த அடியார் திருக்கூட்டம் புண்யஸ்தலங்களை த் தரிசித்துக்கொண்டு பண்டர்பூர் நோக்கி தன் பக்திப்பயணத்தைதொடரும் என அறிகிறோம்.
இதுதான் நான் படித்தது. உங்களுடன் பகிர்ந்துகொண்டேன்.
வாழ்க "சகாள்" வளர்க உனது பணி!